தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Saturday 23 August, 2014

கொழுப்பை குறைக்க வழிகள்!

  இன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு.

   இந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ நாங்கள் சில குறிப்புகளை கொடுக்கிறோம். படியுங்கள் பயன் பெறுங்கள்.


சரியாக சாப்பிடுதல்:

       சரியான முறையில் சாப்பிட்டால் 80% கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றும் போது இதை நாம் சாதிக்க முடியும். தேவையான அளவு நுண் மற்றும் பெரும ஊட்டச் சத்துக்களை சாப்பிட்டால் கொழுப்பை குறைக்க முடியும். இடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்த்தால் தடியான வயிறை தட்டையான வயிறாக மாற்ற முடியும். இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.

தண்ணீர்:

       தாகம், அயர்ச்சி, பசி ஆகியவற்றைப் பற்றி தெளிவாக உணராத சிலர் பசிக்கும் போது நிறைய சர்க்கரை கொண்ட உணவை உண்டு எடையை தங்களை அறியாமலேயே அதிகப்படுத்திக் கொள்கின்றனர் அல்லது கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவை பசியில் விரைந்து உண்கின்றனர். இது தவறு. எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறைந்தது 6 முதல் 8 டம்ப்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். ஆனால் இது உங்கள் எடை மற்றும் வாழ்க்கை முறையை சார்ந்த விஷயமாக அமைகின்றது. இதை கண்டறிந்து உங்களுக்கு தேவையான தண்ணீரின் அளவை கண்டறிந்து அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

உடற்பயிற்சி:

    பல மணி நேரம் உழைப்பு மற்றும் வெகு தூர ஓட்டப் பயிற்சி ஆகிய இரண்டும் தரும் பலன்களை விட சிறிது நேரம் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கொழுப்பு அதிகமாக குறையும். உதாரணமாக நீங்கள் திரெட் மில்லில் பயிற்சி மேற்கொள்ளும் போது அவ்வப்போது உங்கள் வேகத்தை கூட்டி சில வினாடிகள் அதை தொடர்ந்து பயிற்சி செய்த பின் மீண்டும் நமது பழைய வேகத்திற்கு திரும்பி வரும் போது சிறந்த அளவில் தொப்பை குறையும்.

சர்க்கரை வேண்டாம்:

     பொதுவாக நமக்கு கடைகளில் கிடைக்கும் சர்க்கரையை தவிர்ப்பதும் அல்லது குறைப்பதும் நல்லது. இதை தினமும் நமது உணவில் தவிர்த்தால் சிறந்தது. நாம் தினமும் உண்ணும் உணவில் சர்க்கரை நிறைய அளவு ஒளிந்திருக்கும். இதை உணர்ந்து, நாம் உண்ணும் உணவில் சாக்கரையை குறைப்பது நல்லது. இதற்கு பதிலாக தேன், பனங்கற்கண்டு மற்றும் அதிமதுர சாறு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

சோடியம் உட்கொள்ளுதலை குறைத்தல்:

      உப்பை கண்டிப்பாக உணவில் சேர்த்து பயன்படுத்தும் இந்த காலத்தில் சோடியம் உப்பை தவிர, பொட்டாசியம் உப்பு, எலுமிச்சை உப்பு மற்றும் கடல் உப்பு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். மிளகு மற்றும் இதர மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் உப்பு உட்கொள்ளுவதை தவிர்க்க முடியும்.

வைட்டமின் சி உணவுகள்:

     உடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கார்னிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் அவசியமானதாக உள்ளது. அது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தால் சுரக்கப்படும் கார்டிசாலையும் வைட்டமின் சி கட்டுப்படுத்துகிறது. இந்த கார்டிசால் தான் வயிற்று கொழுப்பு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாகும்.

கொழுப்பை குறைக்கும் இந்திய உணவுகள்:

    கொழுப்பை குறைப்பதற்கு இயற்கையான வழிகள் பலவும் உள்ளன. பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு மிளகு, கோஸ், தக்காளி, மற்றும் இலவங்கப்பட்டை, கடுகு, கிராம்பு ஆகியவையும் கொழுப்பை கரைக்க உதவுகின்றன. சிறிது கிராம்பு, பச்சை பூண்டு மற்றும் ஒரு அங்குல அளவிற்கு இஞ்சி ஆகியவற்றை கலந்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் கொழுப்பை நிச்சயம் கரைக்க முடியும். வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து, காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதும் மிகப் பிரபலமான உடல் எடையை குறைக்கும் வழியாக பின்பற்றப்படுகின்றது. இது போன்று பல வழிகள் உண்டு.

  தேவையான ஆரோக்கியமூட்டும் கொழுப்புச் சத்தை சேர்த்துக் கொள்ளுதல் கெட்ட அல்லது தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கும் முயற்சியில் நாம் நல்ல கொழுப்பு வகைகளை சேர்க்க முயல வேண்டும். வெண்ணைய் பழம், ஆலிவ், தேங்காய் ஆகிய பருப்பு வகைகள் நல்ல கொழுப்புகளை கொண்டவையாகும்.

காலை உணவை கண்டிப்பாக சாப்பிடவும்:

     காலை உணவை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று நிறைய மக்கள் தவறாக நினைப்பதுண்டு. இது உடல் எடையை குறைக்காமல், உடல் வீக்கமடைய காரணமாகிவிடுகிறது. இதனால் வயிறு உப்புசமடைவது அதிகரித்து, பசி அதிகமாவதால் வயிற்றுக் கொழுப்பு மிகவும் அதிகமாகிறது. ஆகவே அவ்வப்போது நாம் சிறிது சிறிதாக உண்ணும் போது நமது உடல் செரிமானத்தை கட்டுப்படுத்தி உடல் எடையை மேம்படுத்த முடிகிறது. ஆகையால் உணவின் அளவை குறைத்து உண்ணும் நேரங்களை அதிகப்படுத்தி ஆரோக்கியமாக உடலை உருவாக்கிக் கொள்ளுங்கள். உலர்ந்த பழங்கள், பழ வகைகள் மற்றும் பச்சை அல்லது வேக வைக்காத காய்கறிகள் ஆகியவற்றை உண்ணலாம்.

தூக்கம்:

      உடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேர உறக்கம் தேவைப்படுகிறது. உறங்காமல் இருப்பதும் உடல் எடையை கூட்டுவதாக உள்ளது. இத்தகைய எளிய வழிகளை பின்பற்றினால் வயிற்றுக் கொழுப்பை மட்டுமல்ல, முழு உடல் எடையையும் குறைத்து ஆரோக்கிய வாழ்வை வாழ முடியும். இதை முயற்சி செய்து வித்தியாசத்தை உணருங்கள்

Wednesday 20 August, 2014

நீங்களே சோலார் ஸ்பிரேயர் தயாரிக்கலாம்!

நமக்குத் தேவையான எல்லா விஷயங்களும், கைக்கு எட்டுற தொலைவுலதான் இருக்கு. என்ன... கொஞ்சம் மெனக்கெட்டு யோசிச்சா, எல்லாமும் சாத்தியப்படும்''

தன் அனுபவத்திலிருந்து இப்படி அழகாகப் பாடம் சொல்கிறார் உடையாம்பாளையம், கார்த்திகேயன். இவர், தன் சொந்த முயற்சியில் சூரிய சக்தியில் இயங்கும் விசைத் தெளிப்பான் (சோலர் பவர் ஸ்பிரேயர்) ஒன்றை மிகஎளிதாக வடிவமைத்து, அதன் மூலம் நிறைந்தப் பலனை அடைந்து கொண்டிருக்கிறார்.


உடையாம்பாளையம், கோயம்புத்தூர் மாநகர எல்லைக்குள் வரும் பகுதி, இதையே சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு... காய்கறி, கீரை, மலர் சாகுபடி என்று தினந்தோறும் காசு தரும் 'மார்க்கெட் வெள்ளாமை’ செய்து நல்ல வருமானமும் பார்த்து வருகிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.  ரசாயன முறையில் விவசாயம் செய்தாலும் சரி... இயற்கை வழியில் செய்தாலும் சரி... விசைத் தெளிப்பானின் பயன்பாடு முக்கியமே. ஆனால், பெட்ரோல் விலை உயர்வு, மின்சாரத் தட்டுப்பாடு என்று பலவும் தாண்டவமாடுவதால்... விசைத் தெளிப்பான்களைப் பயன்படுத்துவதில் ஏக பிரச்னை. 'என்ன செய்யலாம்' என்று யோசித்தபோதுதான் நண்பர்கள் உதவியுடன் 'சூரியசக்தி விசைத் தெளிப்பான்' உருவாக்கிவிட்டார் கார்த்திகேயன்.

தன் கீரை வயலுக்கு மருந்து தெளித்த கையோடு, பக்கத்தில் உள்ள நண்பரின் செண்டுமல்லித் தோட்டத்தில் தெளித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரைச் சந்தித்தோம். ''நாங்க எல்லாம் பட்டணத்து விவசாயிங்க, ஒரு காலத்துல பருத்தி, வாழை, கரும்புனு செழிப்பான வெள்ளாமை கொடிகட்டி பறந்த ஊருங்க இது. நகரமயமாக்கல்ல தொழிற்சாலை, குடியிருப்புகள்னு... காடு, கழனியெல்லாம் கட்டடமாயிடுச்சு. இதுலயும் ஒரு நன்மை இருக்குங்க. என்னைப் போல சிலர் விவசாயத்தை இன்னும் விடாம செய்யறதால... நல்ல லாபம் பார்க்கிறோம். மக்கள் தொகை பெருகப் பெருக, அவங்களுக்கான காய்கறி தேவையையும் மனசுல வெச்சு சாகுபடி செய்து, உள்ளூரிலேயே உற்பத்திப் பொருளுங்கள வித்து தீர்த்துடறோம். ஆனா, ஆள் பற்றாக்குறை இருக்கறதால... கால் ஏக்கர், அரை ஏக்கர்னுதான் விவசாயம் பண்ண முடியுதுங்க'' என்று ஆதங்கப்பட்டவரிடம், சூரியசக்தி விசைத் தெளிப்பான் உருவாக்கியது பற்றி கேட்டோம்.

படுத்தி எடுத்த ஸ்பிரேயர்கள்!

''அரை ஏக்கரில் பல ரக கீரைகளைப் போட்டிருக்கேன். இன்னொரு அரை ஏக்கரில் வாழை நட்டிருக்கேன். பக்கத்து வயல்கள்ல செண்டுமல்லி, கோழிக்கொண்டைனு மலர் சாகுபடியை நிறையபேரு செய்றாங்க. அவங்க தோட்டத்துப் பயிருக்கெல்லாம் பூச்சிக்கொல்லி தெளிக்கிற வேலையும் நமக்கு வந்து சேரும். மேலும் கீழும் கையால இழுத்து இழுத்து, ஹேண்ட் ஸ்பிரேயர் மூலமாதான் ஆரம்பத்துல தெளிச்சேன். ஆனா, ஒரு பத்து டேங் அளவுக்குத் தெளிக்கறதுக்குள்ள கை வலி எடுத்துடும். 'சரி, பவர் ஸ்பிரேயர்’ல தெளிக்கலாம்னு அதையும் செஞ்சு பார்த்தேன். பெட்ரோல் விக்கிற வெலைக்கு, என்னை மாதிரி சின்ன அளவுல விவசாயம் பண்றவங்களுக்கு கட்டுப்படியாகல. போதாக்குறைக்கு அது போடுற சத்தம் அக்கம்பக்கத்துல தொந்தரவா இருக்குனு குற்றச்சாட்டு வேற. வெயிட்டும் ரொம்ப அதிகம். பொழுதன்னிக்கும் சுமந்து தெளிக்கறது ஆகற காரியம் அல்ல.

'மாற்று வழியா என்ன செய்யலாம்?'னு யோசிச்சப்பதான், 'பேட்டரி ஸ்பிரேயர், மானிய விலையில் விவசாய ஆபீஸ்ல கிடைக்கும்'னு கேள்விப்பட்டு முறைப்படி பதிவு செய்து வாங்கினேன். சார்ஜர் பேட்டரியில இயங்குற அந்த ஸ்பிரேயர்,

10 லிட்டர் கொள்ளளவு கொண்டது. ரெண்டு மணி நேரம் சார்ஜ் ஏத்தினா, ஒரு மணி நேரம் (100 லிட்டர்) தெளிக்கலாம். அப்புறம் வீட்டுக்கு வந்து ரெண்டு மணி நேரம் சார்ஜ் ஏத்தணும். கரன்ட் கட் பயங்கரமா இருக்கற நேரம்கிறதால... சார்ஜ் ஏத்த முடியாம போய், பாதி வெள்ளாமை காலி ஆயிடுச்சு.

நிம்மதி தந்த நிரந்தரத் தீர்வு!

'நிரந்தரத் தீர்வு வேணும்'னு தேடினப்போதான்... 'சோலார் பவரை பயன்படுத்தி வீட்டு லைட், விவசாய பம்ப்செட் எல்லாத்துக்கும் மின்சாரம் தயாரிக்க முடியும்ங்கிறப்ப... ஏன் சோலார் பவர் ஸ்பிரேயர் உருவாக்கக் கூடாது'னு தோணுச்சு. உடனே, புதுசா ஒரு பேட்டரி ஸ்பிரேயர் (7 ஏ.ஹெச். பேட்டரி உள்ளது), 10 வாட்ஸ் சோலார் பேனல் (பள்ளிக்கூட ஸ்லேட் அளவில் இருக்கும்) இதையெல்லாம் வாங்கினேன். அந்த பேனலை, ஸ்பிரேயர் டேங்க்ல பொருத்தினேன். சோலார் ஸ்பிரேயர் தயாராயிடுச்சு. இதுக்கு மொத்தமே. வெறும் 4,600 ரூபாய்தான் செலவு. ஆனா வரவு... பல ஆயிரங்கள்'' என்று குஷியோடு சொன்ன கார்த்திகேயன்,


''காலையில 7 மணியில இருந்து சாயந்திரம் 3 மணி வரை தொடர்ந்து, இதைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லி தெளிக்கிறேன். கரன்ட் பத்தி கவலைப்படாம சரியான நேரத்துல தெளிச்சு பயிர்களைக் காப்பாத்த முடியுது. சில பயிர்களுக்கு அதிகாலை நேரத்துலதான் மருந்து தெளிக்கணும். அதுக்கு தோதா முந்தின நாள் சாயந்திரமே கரன்ட் மூலமா சார்ஜ் போட்டு வெச்சுட்டா... தெளிக்கலாம். விடிஞ்சதும் சார்ஜ் ஏத்துற வேலையை ஆட்டோமேட்டிக்கா சோலார் பேனல் கவனிச்சுக்கும்.

டெல்டா மாவட்டங்கள்ல, மின்சாரம் சரிவர கிடைக்காத இந்தக் காலத்துல... ஹேண்ட் ஸ்பிரேயர், பவர் ஸ்பிரேயர்னு வெச்சுக்கிட்டு ரொம்ப சிரமப்பட்டுதான் அங்கெல்லாம் விவசாயிங்க நெல்லு பயிர் பண்றாங்க. அவங்களுக்கு இது பயன்தரும். வாடகைக்குத் தெளிக்கறவங்களுக்கும் நல்ல வருமானத்தைக் கொடுக்கும். பஞ்சகவ்யா, ஜீவாமிர்தக் கரைசல்னு இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்துறவங்க... நல்லா வடிகட்டி பயன்படுத்தணும்'' என்று ஆலோசனைகளையும் தந்தவர், 

நிறைவாக,

''சோலார் மாதிரியான இயற்கை சக்திகள் குறித்த விழிப்பு உணர்வு மக்கள்கிட்ட ரொம்ப குறைவாவே இருக்கு. என்னை மாதிரி சின்ன விவசாயிகளும் சூரியசக்தியைப் பயன்படுத்தி பலனடையறதுக்குத் தேவையானத் திட்டங்கள், முயற்சிகள்னு அரசாங்கம் முழு உத்வேகத்துடன் செயல்படுத்தினா... எரிபொருளுக்காக எங்கயும் நாம கையேந்தத் தேவையே இருக்காது'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.

Sunday 10 August, 2014

செவ்வாய் ஆராய்ச்சியில் தமிழக மாணவர்:அமெரிக்க விஞ்ஞானிகள் முன் விளக்கம்

செவ்வாய் கிரகத்திற்கு அருகில், விண்வெளி வீரர்களை அனுப்புவதற்காக, சர்வதேச திட்ட வடிவமைப்புப் போட்டியில் பங்கேற்க, தமிழக மாணவர் விஷ்ணு பிரசாத் ராம், ஆக., 9ல் அமெரிக்கா செல்கிறார்.


அமெரிக்காவின் நாசா மற்றும் மார்ஸ் சொசைட்டி இணைந்து, 2018 மே மாதத்தில், செவ்வாய் கிரகத்திற்கு அருகில், இரண்டு விண்வெளி வீரர்கள் செல்லும் வகையில், திட்டம் வடிவமைத்து உள்ளது. இதை மேம்படுத்தும் வகையில், சர்வதேச அளவில் மாணவர்களுக்கான திட்ட வடிவமைப்புப் போட்டியை நடத்தியது.இவற்றில், சிறந்த 10 திட்டங்களில் ஒன்றாக, காஞ்சிபுரம் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரி மாணவர்களின் திட்டம் தேர்வு செய்யப்பட்டது.


இதுகுறித்து, மதுரையில் திட்ட ஆய்வுக்கு உதவிய, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி சிவசுப்ரமணியன் கூறியதாவது:ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியின், வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த, எட்டு மாணவர்கள் குழுவாக விண்ணப்பித்தனர். இவர்களின் தொழில்நுட்ப திட்டத்தை, திருவனந்தபுரம் விண்வெளி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளிடம் விளக்கினர். வரும், ஆக., 9ம் தேதி, அமெரிக்காவின் ஹூஸ்டன் சென்று, அங்குள்ள விஞ்ஞானிகள் முன், மாணவர் விஷ்ணுபிரசாத் ராம், ஆய்வுத்திட்டத்தை விவரிக்கிறார். இம்மாணவர், விருதுநகரைச் சேர்ந்தவர்.இவ்வாறு, அவர் கூறினார்.

ஆய்வு குறித்து, மாணவர் விஷ்ணுபிரசாத் ராம் கூறியதாவது:வரும், 2018 மே மாதத்தில், பூமியில் இருந்து, இரண்டு விண்வெளி வீரர்கள், செவ்வாய்க்கு அருகில் சென்று, 501 நாட்களுக்குப் பின், 2019 ஜூலையில் பூமிக்கு திரும்பும் வகையில், திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.வீரர்கள் மற்றும் அவரது உணவு அடங்கிய, இரண்டு ராக்கெட் தனித்தனியாக செல்லும் வகையில், நாசா திட்டம் தயாரித்து உள்ளது. எங்களது திட்டத்தில், ஒற்றை ராக்கெட் மூலம், வீரர்களையும், உணவை எடுத்துச் செல்லும் திட்டம் தயாரித்துள்ளோம். 501 நாட்களுக்கு, 3,000 கி.கி., தண்ணீர் தேவைப்படும். ஆனால் நீரில் இருந்து ஆக்சிஜனைப் பிரித்து, அதையே சுவாசிக்கவும், சிறுநீரைப் பிரித்து சுழற்சி முறையில் பயன்படுத்தவும் செய்தால், 275 கி.கி., தண்ணீர் போதும்.

எதிர்காலத்தில், செவ்வாயில் இறங்கி ஆராய்ச்சி செய்து, மீண்டும் பூமிக்கு வீரர்கள் திரும்பி வர, மற்றொரு உந்துவிசை தேவை. எனவே, கிரையோஜெனிக் இயந்திரத்தை, கூடுதலாக அனுப்புவதற்கு, திட்டம் தயாரித்து உள்ளோம். செவ்வாயில் இருந்து திரும்பும் போது, வினாடிக்கு, 15.66 கி.மீ., ஆக வேகத்தை அதிகப்படுத்தி உள்ளோம். அவற்றின் பாதையில், 6.25 டிகிரி கோணத்தில் பாதையை, சற்று மாற்றம் செய்யும் போது, வீரர்களின் மீது, வெப்பத்தின் தாக்கம் குறையுமாறு வடிவமைத்து உள்ளோம். இதை, நேரடியாக விளக்குவதற்காக அமெரிக்கா செல்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...