பாரதியார் கவிதைகள்...
மனத்திற்குக் கட்டளை:
பேயா யுழலுஞ் சிறுமனமே
பேணா யென்சொல் இன்றுமுதல்
நீயா யொன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.
கடமை:
கடமை புரிவா ரின்புறுவார்,
என்னும் பண்டைக் கதைபேணோம்;
கடமை யறியோம் தொழிலறியோம்;
கட்டென் பதனை வெட்டென்போம்;
மடமை, சிறுமை, துன்பம்பொய்
வருத்தம், நோவு, மற்றிவைபோல்
கடமை நினைவுந் தொலைத்திங்கு
களியுற் றென்றும் வாழ்குவமே.
அறிவே தெய்வம்:
ஆயிரந் தெய்வங்க ளுண்டென்று தேடி
அலையு மறிவிலிகாள் - பல்
லாயிரம் வேத மறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கு மதியிலிகாள் - எத
னூடுநின் றோங்கு மறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ?
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ - பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ?
வேடம்பல் கோடியொ ருண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே - ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே.
நாமம்பல் கோடியொ ருண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே - ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே.
போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமே - உப
சாந்த நிலையேவே தாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே.
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டு மறைகளெலாம் - நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்
கவங்கள் புரிவீரோ?
உள்ளத னைத்திலு முள்ளொளி யாகி
யொளிர்ந்திடு மான்மாவே - இங்குக்
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ?
மெள்ளப் பலதெய்வம் கூட்டிவளர்த்து
வெறுங்க தைகள் சேர்த்துப் - பல
கள்ள மதங்கள் பரப்புவற் கோர்முறை
காட்டவும் வல்லிரோ?
ஒன்றுபிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம் - என்றும்
ஒன்றுபிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனக் கொள்வாயே.
நல்லதொரு பகிர்வுக்கு நன்றி சார் !
ReplyDeleteதங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சார் @ திண்டுக்கல் தனபாலன்
ReplyDelete