தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Friday 1 February, 2013

அறிவியல் அறிஞர்கள்:-

தாமசு ஆல்வா எடிசன்:
 
தாமசு ஆல்வா எடிசன் (பெப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கியவர். இது 1900-ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) இதழானது.

தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவற்றுள் பெரும்பாலானவை இவரால் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல; முன்னைய உரிமங்களில் ஏற்படுத்திய சீரமைப்புக்களாகும். இவையும் பெரும்பாலும் இவரது பெருமளவிலான ஊழியர்களால் செய்யப்பட்டவை. இக்கண்டு பிடிப்புக்களுக்கான பெருமையில் மற்றவர்களுக்குரிய பங்கைக் கொடுக்காதமைக்காக எடிசன் அடிக்கடி விமர்சிக்கப்ப்ட்டார். இருந்தாலும், எடிசன் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் உரிமங்களைப் பெற்றார். எடிசன் நம்பிக்கை நிதியம் (Edison Trust) எனப் பொதுவாக அறியப்பட்ட, ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையகங்களின் கூட்டமைப்பான அசையும் பட உரிமக் நிறுவனம் (Motion Picture Patent Company) ஆரம்பித்தார்.


ஆர்க்கிமிடீஸ்:
ஆர்க்கிமிடீஸ் (கிமு 287 - கிமு 212) ஒரு கிரேக்கக் கணிதவியலாளரும், இயற்பியலாளரும், பொறியியலாளரும், கண்டுபிடிப்பாளரும், வானியலாளரும் ஆவார். இவரைப்பற்றிக் குறைந்த தகவல்களே கிடைக்கின்ற போதும் இவர் பண்டைக் காலத்தின் முன்னணி அறிவியலாளர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். நீர்நிலையியல், நிலையியல் ஆகிய துறைகளுக்கான அடிப்படைகளை அமைத்ததும், நெம்புகோல் தத்துவத்தை விளக்கியதும் இயற்பியல் வளர்ச்சிக்கு இவரது பங்களிப்புக்களாகும். திருகு பம்பி உட்படப் பல இயந்திரங்களை இவர் உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது. படையெடுப்புக் கப்பல்களை தூக்கியெறியுமாறும், ஆடிகளைக் கொண்டு அவற்றை எரிக்க வல்லதுமான பொறிகளை இவர் வடிவமைத்ததாக கூறப்படுகின்றது.

ஆக்கிமிடீஸ் பண்டைக்காலத்தின் மிகச் சிறந்த கணிதவியலாளர் மட்டுமன்றி, எக்காலத்திலும் மிகச் சிறந்த கணிதவியலாளர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார். ஒரு பரவளைவின் கீழுள்ள பரப்பளவை( தொகையடி) ஒரு பல்கோணியின் பக்கங்களை அதிகரித்து ஓரங்களை ஒட்ட வைப்பதன் மூலம் (method of exhaustion)அண்ணளவாக கணக்கிட்டார். பை எனும் எண்ணையும் மதிப்பிட்டார். ஆர்க்கிமிடீசு சுருளி, சுற்றன்மேற்பரப்பு மூலம் பெறப்பட்ட கனவளவு, பெரிய எண்களை எழுதும் வழி ஆகியவை இவரின் மற்றைய பங்களிப்புக்களாகும்.

சிராக்குசா நகர் முற்றுகையின் போது ஆர்க்கிமிடீசை ஒன்றும் செய்யக்கூடாதென்ற உத்தரவையும் மீறி உரோமானியப் படைவீரன் ஒருவரால் கொல்லப்பட்டார். சிசரோ என்பவர் ஆர்க்கிமிடீசின் கல்லறையைக் கண்டதை விவரிக்கையில் அதன் மேல் உருளையை உள்தொடு உருண்டை இருந்ததென்கிறார். ஆர்க்கிமிடீசு உருண்டையின் மேற்பரப்பளவும், கனவளவும் உருளையினதன் மூன்றிலிரு மடங்காகும் என நிறுவியதை தன் வாழ்வின் சாதனையாகக் கருதினார்.

அவ்வப்போது அலெக்சாந்திரியாவின் கணிதவியலாளர்கள் இவரை மேற்கோள் காட்டியபோதும், இசிதோர் என்பவரே முதன்முறை கி.பி.530 இல் இவரது நூல்களைத் தொகுத்தார். 6ம் நூற்றாண்டளவில், இயூதோசியசு என்பான் விரிவுரை எழுதமட்டும் இவரது நூல்கள் பெரும் புழக்கத்துக்கு வரவில்லை. இவரது நூல்களில் நடுக்காலம் தாண்டியும் எஞ்சியவை மறுமலர்ச்சிக் காலத்தில் அறிஞரிடத்தே பெரு மதிப்புப் பெற்று விளங்கின. 1906ல் கண்டெடுக்கப்பட்ட ஆர்க்கிமிடீசின் தொல் கட்டமைப்பு மாறா உருமாற்றச்சுவடி, அறிஞர்க்கு அவர் தன் கணிதச் செய்கைவழி காணும் நுழைபுலத்தை வழங்கிற்று.


அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல்:
அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல் ( Alexander Graham Bell, மார்ச் 3, 1847 - ஆகஸ்ட் 2, 1922) ஓர் ஆசிரியராகவும், அறிவியல் அறிஞராகவும் அறியப்படுகிறார். இவரது தாயாரும் மனைவியும் செவிடராதலினால் இவரது ஆய்விற்கு இது ஓர் உந்துசக்தியாக அமைந்திருக்கலாம். இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம் ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார்.

ரைட் சகோதரர்கள்:
ரைட் சகோதரர்கள் (Wright brothers, ஓர்வில் (ஆகஸ்ட் 19, 1871 – ஜனவரி 30, 1948), வில்பர் (ஏப்ரல் 16, 1867 – மே 30 1912), என்ற அமெரிக்கர்கள் முதன்முதலில் டிசம்பர் 17, 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள். வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் "ஓர்வில் ரைட்" 12 கு.வ. (H.P.) ஆற்றல் கொண்ட பெட்ரோல் இயந்திரம் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் 30 மைல்/மணி வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்து புகழடைந்தார்.

1904, 1905 ஆண்டுகளில் ரைட் சகோதரரின் பறக்கும் ஊர்தி பல முறையில் முற்போக்காகி மேன்மைப் படுத்தப்பட்டன.

மார்க்கோனி:
மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி(Guglielmo Marconi ஏப்ரல் 25, 1874 - ஜூலை 20, 1937) வால்வுகளுள்ள் வானொலியைக் கண்டு பிடித்தவர். 'நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை" எனப்படுபவர். ' கம்பியற்ற தகவல்தொடர்பு முறை' மற்றும் 'மார்க்கோனி விதி' ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897 ல் 'மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்', 'வானொலி'மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.

ஜான் லோகி பைர்டு:
ஜான் லோகி பைர்டு (13 ஆகஸ்ட் 1888 - 14 ஜூன் 1946) ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரபல கண்டுபிடிப்பாளர். உலகின் முதல் வெளிப்படையாக செயல்முறை செய்து காண்பிக்கப்பட்ட தொலைக்காட்சியை கண்டுபிடித்தவர். மேலும் இவர் வண்ண தொலைக்காட்சிக் குழாய் மற்றும் போனோவிஷன் எனப்படும் ஒளிப்பதிவுக் கருவியையும் கண்டுபிடித்தார். ஸ்காட்லாந்தின் ஹெலன்ஸ்பெர்க் நகரில் பிறந்தவர்.

பெஞ்சமின் பிராங்கிளின்:
பெஞ்சமின் பிராங்கிளின் (Benjamin Franklin; (ஜனவரி 17, 1706 – ஏப்ரல் 17, 1790) என்பவர் ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் ஆவார். இவர் ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஒரு எழுத்தாளர், அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் ஆவார். மின்னியலில் இவரின் கண்டுபிடிப்புகளுக்கும், கருத்துக்களுக்குமாக இவர் இயற்பியல் சரித்திரத்தில் ஒரு முக்கிமான அறிவியலாளராகக் கருதப்படுகிறார். அமெரிக்க ஆங்கில எழுத்திலக்கணத்திலும் சீர்திருத்த முறைமை அவசியத்தை வலியுறுத்தியவர். வணிகம், அறிவியல், இலக்கியம், அரசியல் ஆகிய நான்கு துறைகளில் பெரும் வெற்றி பெற்றவர்; இளம் வயதில் கையில் ஒரு காசுகூட இல்லாமல் ஏழ்மையில் இருந்தும் அச்சுத்தொழிலின் மூலமும், பத்திரிக்கையின் மூலமும் நாற்பது வயதுக்குள் செல்வந்தரானவர்.

'Poor Richard's Almanack' என்ற புகழ்பெற்ற இதழை உலகுக்குத் தந்தவர். உலகின் மிகப்பிரபலமான தன்வரலாற்று நூல்களுள் ஒன்று அவருடையது. மின்சாரம் பற்றியும் இடி மின்னல் பற்றியும் புகழ்பெற்ற ஆராய்ச்சிகளை செய்து இடி தாங்கியையும், வெள்ளெழுத்தக் கண்ணாடியையும்(bifocal glasses) மற்ற பல கருவிகளையும் கண்டுபிடித்தவர். அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக, அரசதந்திரியாக, பிரான்சுக்கான தூதராக விளங்கியவர். அமெரிக்க சுதந்திர பிரகடணத்தை தயார் செய்து கையெழுத்திட்ட மூவரில் ஒருவர்.

மேரி க்யூரி:
மேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் வேதியியல் மற்றும் இயற்பியலுக்காக நோபல் பரிசை முறையே 1911, 1903 ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்.

2 comments:

Unknown said...

அருமை

V.Nadarajan said...

உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி @ yogi mech

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...