தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Wednesday 29 January, 2014

வொக்ஸ்வாகன் மிதக்கும் கார்:

வொக்ஸ்வாகன் மிதக்கும் கார்

மின்காந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட சாலையில் மிதந்துகொண்டே செல்லும் இந்த காரில் புகையோ, இயற்கையை பாதிக்கும் மாசுக்களோ சிறிதும் இல்லை.


Wednesday 8 January, 2014

இணையத்தின் சமூகப் பயன்பாடு:

முன்னுரை:
     இன்றைய காலக்கட்டத்தில் 'இணையம்' என்ற ஒற்றைச் சொல்  இந்த உலகத்தினையே ஆட்டுவிக்கின்றது. இணையமென்ற மாபெரும் சக்தியை, மக்கள் சக்தியாக்கி மகத்தான வெற்றிகளை சமகாலத்தில் பலநாட்டு சாமானிய மக்களும் அனுபவித்துக்கொண்டு வருகின்றனர். இதற்கு உதாரணங்களாகும் பல நிகழ்வுகளைக் கூறலாம். நமது இணைய செயல்பாடுகளான குழும விவாதங்கள் மற்றும் வலைத்தளம் ஊடாகவே இன்னும் விரிவாகி, சமூக பொதுதளங்களான பேஸ்புக் ,ஆர்கூட்,ட்விட்டர் வரையிலுமாக செயல்பட்டு வருகின்றோம். அதுவும் மிக விரைவான கருத்துப்  பரிமாற்றங்களால் நொடிக்குநொடியிலான பலதரப்பட்ட செய்திகள் பகிரப்படுகின்றன.

 தனிமனிதன் எதிர்கொள்ளும் பல்வேறு வாழ்வியல் இருப்பியல் பிரச்சனைகளை கையாள்வதே சமூகம். சூழலின் பொருட்டும், தற்போதைய வாழ்வியல் நெறிமுறைகள் மாற்றங்களினாலும் தற்போது இணையத்தின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கருத்து பரிமாற்றம் என்பது நாம் அனுபவித்துணர்ந்த செயல்களின் வழிமுறைகளையும், அதன் நிறை குறைகளையும், அதன் பயன்பாடுகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் இணையத்தில் பகிர்வதேயாகும். தமக்கு நேர்ந்த இன்பதுன்ப நிகழ்வுகளை சமாளித்து, அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளை மற்ற தோழமைகளுக்கும் பகிர்தலே,கருத்து தெளிதல்களுக்கு வித்திடும். கல்வித் தேடலுக்கு, அறிவுத் தேடலுக்கு, வணிக விருத்திக்கு, நண்பர்களோடு  பேச, சமூக வலைதளங்களில் பொழுதுபோக்க, இன்னும் இன்னும் எத்தனையோ வடிவங்களில் இன்றைய சூழலில் இணையம் பயன்பட்டு வருகிறது. அறிவியல் முன்னேற்றங்கள் ஆக்கத்திற்கும், அழிவிற்குமாய்  பயன்படுவதைப் போலவே அறிவியல் வளர்ச்சியின் ஒரு அங்கமான இணையத்தின் வளர்ச்சியையும் நாம் பார்க்க வேண்டும். இணையத்தின் சமூகப் பயன்பாடு பற்றி இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.

பொருளுரை:
இணையத்தின் சமூகவலைத்தள ஆளுமை:
     வானொலி ஐந்து கோடி மக்களைச் சென்றடைய 32 வருடம் ஆனது, தொலைக்காட்சி ஐந்து கோடி மக்களைச் சென்றடைய 13 வருடமானது, மடிக்கணினி ஐந்து கோடி பேரை நெருங்க 5 வருடமானது, ஆனால் இரண்டே வருடங்களில் முகபுத்தகம், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் 5 கோடி மக்களைச் சென்றடைந்து விட்டது. சமூக வலைத் தளங்களில் தங்களை இணைத்துக் கொள்ளாதவர்களே இல்லை என சொல்லுமளவுக்கு இன்றைய உலகில் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் வேறூன்றி உள்ளது. நண்பர்களுடனாna தொடர்புகளைத் தக்கவைத்துக் கொள்ளவும், செய்திகளையும் மற்ற விவரங்களையும் ஒருவருடனோ அல்லது அதற்கு அதிகமானவருடனோ பகிர்ந்துக் கொள்ள இந்த சமூக வலைத்தளங்கள்  பெரும் உதவி செய்கின்றது.

     மாணவர்கள் தங்களுடைய பாடங்களில் உள்ள குழப்பங்களைத் தீர்த்துக் கொள்ள, பாட குறிப்புகளைப் பகிர்ந்துக் கொள்ள, நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களைப் பற்றிய மக்களின் கருத்துகளை அறிய, விளம்பரங்களைச் செய்ய, பொது மக்கள் அரசியல், பொது வாழ்க்கை, பயனீட்டு பொருட்கள் என தங்களுடைய அதிருப்தியையும் கருத்துகளையும் பதிவு செய்ய, என்று பல வகைகளில் இந்த சமூக வலை தளங்கள் தகவல் பறிமாற்றத்தை இலகுவாக்கியுள்ளது. அரசியல்வாதிகள், வியாபாரிகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என யாவரும் ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பை இந்த வலைதளங்கள் உண்டாக்கி தந்துள்ளது. நண்பர்களிடையே நெருக்கத்தை உண்டாக்கும் நோக்கத்தில் தான் சமூக வலைத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டது. தன்னுடைய மூல நோக்கத்தை இன்றும் சமூக வலைத்தளங்கள் செவ்வனே செய்து வருகிறது. 

உரையாடும் களமாக:
 தனிமனித உரையாடல் கிட்டத்தட்ட மறைந்துவரும் சமூகத்தில், முக்கியமாக இளைஞர்களுக்கு அதற்கான வடிகாலாக இணையம் மாறியிருக்கிறது. மணிக்கணக்கில் நேரத்தை இணையத்தில் செலவிடும் இளைஞர்களின் மனப்போக்கில் இதை எளிதாக அறிய முடியும். உலகளவில் சமூக வலைத்தளங்களுள் முதன்மையானதாக கருதப்படும் முகநூலை(பேஸ்புக்) அதிகம் பயன்படுத்தும் உலக நாடுகளில் இந்தியாவும் முன்னணியில் உள்ளது. அதே நேரம் இந்தியாவில் 8 முதல் 12 வயது வரையிலான 89 சதவீதம் குழந்தைகள் பெற்றோர் அனுமதியுடன் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அணுகுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது  ஆறுதலான விஷயமாகும்.  
ஏதோ தூர தேசத்தில் இருக்கும் மகனிடமோ, உறவினரிடமோ நாம் உரையாடுவதற்கான வாய்ப்பையும் இணையம் வழங்குகிறது. அருகில் அமர்ந்து பேசும் வாய்ப்பினை, உரையாடல்கள் நீர்த்துப் போன இக்காலத்தில் இணையம் எளிய முறையில் பக்கத்தில் அமர்ந்து பேசுவதுபோல் உணரும் வகையில் ஸ்கைப்(Skype)  பயன்படுகிறது. இப்போதெல்லாம் வெளிநாட்டில் இருக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாட்களை இந்த தொழில்நுட்ப வசதியோடு இருக்கும் இடத்திலிருந்தே நேர்காணல் நடத்தி தங்களுக்கு தேவையானவர்களை தேர்ந்தெடுக்கின்றது.

வீட்டிலிருந்தே  அலுவல்:
     வீட்டிலிருந்தபடியே இணையம் வழியாக அலுவலகப் பணிகளை முடித்துவிடுவோரின் எண்ணிக்கையும் நாள்தோறும் சத்தமில்லாமல் அதிகரித்து வருகிறது. பிரபலமான பெருநிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு இதனைப் பரிந்துரைக்கின்றன. இதன்மூலம் நிறுவனத்தின் பணிகள் விரைவாக முடிந்துவிடுவதுடன், ஊழியர்களுக்கு காலம், பணம், பயண அலைச்சல் மிச்சமாவதுடன் மனநிறைவும் ஏற்படுகிறது. 

வலைப்பூக்கள்-வலைத்தளங்கள்:
     யார் வேண்டுமானாலும் எழுதலாம். எந்தப் பிரிவின் கீழும் எழுதலாம். நாமே அதனை வெளியிடலாம். நம்முடைய கருத்துகளுக்கு, பதிவுகளுக்கு உடனடியாக எதிர்வினையைப் பெறலாம் என்கிறபடியாக பல்வேறு நல்லியல்புகளைக் கொண்டிருப்பதாலோ என்னவோ தமிழ் வலைப்பதிவுகளின் எண்ணிக்கையும், அதில் இயங்குபவர்களின் பங்களிப்பும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. சாமானியர்களும் இதில் பங்களிக்கத் துவங்கியிருப்பதால், தமிழ்ச்சமூகத்தின் வாசிப்பு வளம் பெருகத் தொடங்கியிருப்பதை உணரலாம். அத்தோடு, புதிய எழுத்தாளர்கள் பலரும் உருவாகிவருவதும் மறுக்க முடியாதது.

மின்வழிக் கற்றல்:
      இணைய வழிக் கற்றல் பெருகத் தொடங்கியிருப்பதன் மூலம், மாணவர்களுக்கும், கற்றலின்பால் ஆர்வங்கொண்ட பலருக்கும் இணையம் ஆசானாக விளங்கத் தொடங்கியிருக்கிறது. பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைகழகங்கள், கல்வி அமைப்புகள் இணையவழி கற்றலை சான்றிதழ்கள் மூலம் அங்கீகரிப்பதும், தொடர்ச்சியாக அதை முன்னெடுப்பதும் ஆரோக்கியமான நிகழ்வுகள். இதன்மூலம், இருந்த இடத்தில் இருந்தே, வீட்டிலிருந்தே கல்வி பயில்வதற்கான வாய்ப்பை ஆர்வமுள்ள எல்லோருக்கும் வழங்குகிறது இணையம்.

வணிக-பொருளாதார பயன்பாடுகள்:
     வணிக ரீதியாகவும் இணையத்தினை பயன்படுத்தி இலாபம் ஈட்ட முடியும். இணையவழி வணிக பரிவர்த்தனைகளின் தாக்கம் தற்போது சாதாரண மக்களையும் எட்டியுள்ளதால், மின் வணிகம் நல்ல மதிப்பையும், வளர்ச்சியையும் பெற்றுள்ளது. அதிலும் தற்போதைய இளைஞர் சமுதாயத்தின் தேவைகள் அனைத்தும் இணையத்தின் மூலமாக எளிதில் கிடைக்கின்றன. சலுகை விலையில் சகலவிதமான பொருட்களும், மின்வணிக நிறுவனங்கள் மூலமாக இணையத்தில் கிடைக்கிறது. இவ்வாறாக வாங்கப்படும் பொருட்களின் தரமும், விலையும் வாடிக்கையாளர்களிடையே நம்பகத்தன்மையை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், இணையத்தில் இவ்வகை வணிகங்களின் எதிர்காலம் வளமாகவே உள்ளது. மக்களின் நேரத்தினையும், பணத்தினையும் மிச்சப்படுத்துவதற்கு இவை உதவியாக உள்ளன. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, பிரபல அமெரிக்க மின்வணிக நிறுவனமான அமேசான் ஆளில்லா விமானங்களின் மூலம் பொருட்களை அனுப்பி வைக்கும் முறையை பரிசீலித்து வருவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கலைக்களஞ்சியங்கள்-அகராதிகள்:
     இணையவெளியின் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவின் தமிழ்ப் பக்கத்திற்கு பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களின் நெடும் பங்களிப்பின் மூலமாக, ஆரம்பிக்கப்பட்டே பத்தே ஆண்டுகளில் இந்திய மொழிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ் விக்கிபீடியாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்களிப்பாளர்கள் 57 ஆயிரத்துக்கும் மேலான கட்டுரைகளை எழுதியுள்ளனர். உலக அளவில் 287 மொழிகளில் 60-வது இடத்தில் தமிழ் விக்கிபீடியா உள்ளது. இணையத்தில் உள்ள மின் அகராதிகள், மொழிமாற்றிகள் மூலமாக பல்வேறு மொழிகளையோ, அல்லது குறிப்பிட்ட வேற்றுமொழிச் சொல்லுக்கான பொருளையோ உடனடியாக அறிய முடிகிறது.

சமூக மாற்றங்கள்:
சமீப ஆண்டுகளில் ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களில் நடைபெற்ற விரைவான தகவல் பரிமாற்றங்களின் காரணமாய் எகிப்து, துனீஷியா முதலான சில நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவிலும் சமூகவலைதளங்களின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. பல்வேறு இந்திய அரசியல் மற்றும் சமூக  நிகழ்வுகளின் பின்னணியில் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களின் தாக்கங்கள், எதிரொலிகள் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்திற்கு சமூகவலைதளங்கள் பெருமளவு உதவும். சில அரசியல் கட்சிகள் இணையப் பிரச்சாரத்தினை வலுப்படுத்த இவற்றையே நம்பியிருக்கின்றன. பெரும்பாலான இளைஞர்கள் இவற்றைப் பயன்படுத்துவதும், உடனடியாக எதிர்வினை தருவதுமாய் இருப்பதால் சமூக நிகழ்வுகள் இதில் முக்கியத்துவப்படுத்துகிறது. ஆனாலும் ஆழமான விவாதங்கள் அதிகளவில் இப்போதுவரை இல்லாமல்தான் இருக்கிறது. அடுத்துவரும் காலங்களில் ஆழமான சமூக விவாதங்களுக்கு சமூக வலைதளங்களின் மூலமாக இணையம் களம் அமைக்கக் கூடும்.

முடிவுரை:
    சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 20 கோடியே 50 லட்சமாக இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜூனில் இந்த எண்ணிக்கை 24 கோடியே 30 லட்சத்தைத் தொட்டுவிடும் என்று இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்க ஆய்வு தெரிவிக்கிறது. இதன் மூலம் இந்தியா அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடிக்கும். தற்போது சீனா 30 கோடி பயனாளிகளோடு முதல் இடத்திலும், அமெரிக்கா 20 கோடியே 70 லட்சம் பயனாளிகளோடு இரண்டாவது இடத்திலும் உள்ளது.

     இணையம் என்பதை நல்லவிதமாக அணுகினால், அது நன்மையை மட்டுமே பயக்கிறது. அதை ஆயுதமாகக் கருதினால் அழிவையே தந்துவிடும். சமூகத்தின் பார்வையில் இணையம் இருமுனையிலும் கூரானக் கத்தியாகவே பெரும்பாலும் அணுகப்படுகிறது. அப்படியே வைத்துக் கொண்டாலும், அதை பாதுகாப்பாக கையாளுபவர்களுக்கு யாதொரு அழிவுமில்லை. இதே எண்ணத்தை இணையவெளியில் உலவும் அனைவரும், இணையத்தை அன்றாடம் பயன்படுத்தும் அனைவரும் மனதில் நிறுத்தினால் அனைத்தும் நலமே.

மேலும் "தனிநபரின் ஒழுக்கமே, ஒட்டுமொத்த சமுதாயத்தின் ஒழுக்கம்" என்பதை உணர்ந்து இணையத்தின் பயன்பாட்டினை ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்த முயல்வோம். கட்டுரை உருவாக உறுதுணையாக இருந்தது - இணையம்; இக்கட்டுரையே இணையத்தின் பயன்பாட்டிற்கான முன்னுதாரணம். 

இந்த "இணையத்தின் சமூகப் பயன்பாடு" கட்டுரையானது, திரு. ரூபன் மற்றும் திரு. பாண்டியன் அவர்கள் இணையத்தின் வாயிலாக இணைந்து நடத்தும் தைப்பொங்கல் சிறப்புக் கட்டுரை போட்டிக்காக எழுதிப் பகிரப்பட்டுள்ளது. உங்கள் மேலான கருத்துக்களை கருத்துரைப் பெட்டியில் பதிவிடவும். நண்பர்களே!நீங்களும் இந்த கட்டுரைப்போட்டியில் கலந்துக்கொண்டு போட்டியினைச் சிறப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.

அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

நட்புடன்,
வி. நடராஜன் 

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...