தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Wednesday 23 April, 2014

பாரத ரத்னா சச்சின் டெண்டுல்கர்:





1.சச்சின் ஆசைப்பட்டது டென்னிஸ் ஆட. மரத்தில் இருந்து வால்த்தனம் செய்ததற்கு தண்டனையாகத்தான் கிரிக்கெட் பக்கம் அனுப்பப்பட்டார்.


2.சச்சினுக்கு மிகவும் பிடித்த உணவு வடாபாவ். சின்ன வயதில் யார் அதிகம் வடா சாப்பிடுவது என்கிற போட்டியில் சச்சினே ஜெயிப்பார். அடிக்கடி பிள்ளைகளை சண்டைக்கு இழுப்பதும் உண்டு.

3.தவளை பஜ்ஜி செய்து தரச்சொல்லி குறும்புகள் செய்த நாயகன்.

4. சச்சினின் டென்னிஸ் ஆதர்சம் மெக்கன்ரோ, கிரிக்கெட்டில் சுனில் கவாஸ்கர்.

5.ரஞ்சி, துலிப், இரானி போட்டிகளில் அடித்த சதங்கள் இந்தியா அணிக்குள் இடம் பெற்றுத்தந்தது.

6 .சச்சின் தேவ் பரமன் எனும் இசைகலைஞரின் நினைவாக தந்தையால் அந்த பெயர் சூட்டப்பட்டது

7.சச்சின் இளம் வயதில் உள்ளூர் போட்டிகளில் கலக்கிக்கொண்டு இருக்கும்போது சுனில் கவாஸ்கர் தன்னை பாராட்டி எழுதிய கடிதத்தை இன்னமும் பாதுகாக்கிறார்.

8. பாகிஸ்தான் தொடரில் வாக்கரின் பந்தில் மூக்கில் ரத்தம் கொட்ட வெளியேறி, பின் திரும்பி வந்து பவுண்டரிகளை விளாசியபோது, உலக கிரிக்கெட் சச்சினை உற்றுநோக்க ஆரம்பித்தது

9.முதல் சதம் அடிக்கும் வாய்ப்பை சச்சினிடம் இருந்து நியூசிலாந்து அணியின் நபர் ஒருவர் காட்ச் பிடித்து தட்டிப் பறித்தார். அவர்தான் பின்னாளைய கோச் ஜான் ரைட்.

10.ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக உலக அளவில் அதிகபட்ச தாண்டவம் சச்சினுடையது. அதிலும் ஷேன் வார்னே இவர் கையில் சிக்கிக்கொண்டு பட்ட பாடு உலக பிரசித்தி.

11.குரு ராம்காந்த் அச்ரேகரின் மீது சச்சினுக்கு பிரியம் அதிகம். அவர் கொடுத்த ஒற்றை ரூபாய் நாணயங்களை தொலைத்ததற்காக ஏகத்துக்கும் வருந்தி இருக்கிறார்.

12. சச்சினுக்கு மனக்கட்டுப்பாடு அதிகம். கவர் டிரைவ் ஷாட்டில் தொடர்ந்து அவுட் ஆக, 241 ரன்கள் அடித்தபோது ஒரு கவர் டிரைவ் ஷாட் கூட அடிக்கவில்லை

13.மூப்பத்து மூன்று வயதில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தார். மன மற்றும் உடல் ஒருங்கிணைவை வீழச்செய்யும் சாம்பர்க் விளைவு காரணம். அதை விட்டு வெற்றிகரமாக மீண்டார்.

14. கிரிக்கெட்டில் கண்கலங்கிய தருணங்கள் முக்கியமாக மூன்று. அப்பாவின் மரணத்திற்கு பின் சதம் அடித்தபோது; எண்டுல்கர் என டைம்ஸ் ஆப் இந்தியா குறித்தபோது; உலகக்கோப்பை வெற்றியின்போது! ஒவ்வொரு சதத்தின்போதும் வானை நோக்கி வணக்கம் சொல்வது தந்தைக்கு.

15.சச்சின் ஆட ஆரம்பித்து கோடிகளில் புரள ஆரம்பித்த பிறகும் தன் எளிய வேலையை விட்டுவிடாத தன் அம்மா, தன் எளிமைக்கான ஆதர்சம் என்பார்.

16.பெடரர், ஷுமாக்கர், ஹாரி பாட்டர் புகழ் ரட்க்ளிப்ப் சச்சினின் ரசிகர்களில் சிலர்.

17. "சச்சினுக்கு பந்து போட நான் ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும்; மட்டையில் இவ்வளவு ஆற்றல் இவரிடம் உள்ளது" - அவரின் பதினாறு வயதில் அவருக்கு பந்து போட்ட பின் டென்னிஸ் லில்லி சொன்னது.

18. பட்டோடிக்கு அடுத்தபடியாக மிக இளம் வயதில் (23) இந்திய கிரிக்கெட் கேப்டன் ஆனார். சொந்த மண்ணில் வெற்றிகளைப் பெற்றாலும், வெளிநாடுகளில் இவர் தலைமையிலான அணி பல தோல்விகளைக் கண்டதால், தானாகவே கேப்டன்பொறுப்பில் இருந்து விலகினார்.

19. உலக அளவில் மட்டுமல்ல; ஐ.பி.எல்.லிலும் அதிகபட்ச பவுண்டரிகள் இவர் வசம்தான்.

20. விமர்சனங்களுக்கு பதில் சொல்வதை பெரும்பாலும் தவிர்ப்பார். எனினும் சச்சினின் கிரிக்கெட்டின் மீதான காதலை குறைத்து கிரேக் சாப்பல் பேசியபோது மட்டும் நெடிய பதில் சொன்னார். அப்பொழுதும் அவர் அப்படி சொல்லி இருந்தால் மட்டுமே இந்த பதிலை கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.

21. இந்திப் பின்னணிப் பாடகர் கிஷோர் குமாரும் இங்கிலாந்து ராக் இசைக்குழு ‘டைர் ஸ்ட்ரெயிட்ஸ்’ம் சச்சினுக்கு பிடித்தவர்கள். பிடித்த நூல் காரி சோபர்ஸ் அவர்களின் 'TWENTY YEARS AT THE TOP!'

22.கவுண்டி போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் வெளிநாட்டு வீரர் இவர்தான்.

23. சென்டிமென்ட்டுகளை அதிகம் நம்புபவர். கிரிக்கெட் என்றால் 10-ஆம் நம்பர் ஜெர்சி இல்லாமல் விளையாடமாட்டார். அவரது அனைத்துக் கார்களின்
நம்பரும் 9999-தான்.

24. இரட்டை சதம் அடித்தபோது யார் பாதிக்கப்படர்களோ இல்லையோ, கிரிக்இன்போ கிராஷ் ஆனது.

25. எந்தப் போட்டியும் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே, பெவிலியனில் இருந்து பிட்ச் வரை நடந்து திரும்புவார் சச்சின்.

26. சச்சினின் மொபைலில் இருந்து யாருக்கு எஸ்.எம்.எஸ். வந்தாலும், 'தேங்க்ஸ் அண்ட் லவ் சச்சின்’ என்பதே இறுதி வரியாக இருக்கும்.

27.மதுபான விளம்பரங்களில் நடிக்க மறுத்து, நாட்டின் இளைஞர்கள் மீதான அக்கறையை அழுத்தமாக சொன்னவர். தன்னை சட்டை இல்லாமல் படம் எடுப்பதை கூட அனுமதிக்காதவர். தன்னை ஒழுக்க சீலராக பார்க்கும் இளைஞர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள் என்றார்.

28. விளையாடப் போவதற்கு முன்னால் தன்னுடைய இடது பக்க பேடைத்தான் முதலில் அணிவார். ஆடப்போகும் பிட்ச்சில் முன்னரே ஒரு நடை நடந்துவிட்டு வருவார் போட்டிக்கு முன்னர் இசைக்கேட்பது எப்பொழுதும் பழக்கம்

29. தன் ஹெல்மெட்டில் தேசிய கொடியை முதலில் அணிந்த வீரர்; வெளியே மாறுவேடத்தில் போகிற பழக்கம் உண்டு. ரோஜா படத்துக்கு போய், விக் கழன்று விழுந்து பெரிய ரணகளம் ஆனது. மும்பை தாக்குதலுக்கு பிறகு மாறுவேடம் நின்று போனது.

30. நூறாவது சதம் அடித்ததும் "நான் கடவுள் இல்லை; நான் சச்சின் !"என்றார்

31. 1988ல் பிராபோர்னேவில் நடந்த போட்டியில், பாகிஸ்தானுக்காக, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் பயிற்சிப் போட்டியில் ஃபீல்டிங் செய்திருக்கிறார். அடுத்த வருடம் வான்கடேவில் இந்தியாவுக்கும் ஜிம்பாப்வேக்கும் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் ‘பால் பாய்’ஆக பணியாற்றியிருக்கிறார்.

31. அப்னாலயா என்கிற அமைப்பில் உள்ள எல்லா ஆதரவற்ற குழந்தைகளின் வளர்ப்புத்தந்தை சச்சின்தான்.

32.பிராட்மன் “தன்னைப்போலவே ஆடுகிறார். சச்சின் என் மகன் போன்றவர்” என சிலாகித்து சொன்னார்.

33. பிராட் ஹாக் தன் விக்கெட்டை எடுத்த பின், அந்த பந்தில் கையெழுத்து வாங்கியபோது ‘இது மீண்டும் நடக்காது’ என எழுதி தந்தார். அது அப்படியே நடக்கவும் வைத்தார் (பத்து போட்டிகளுக்கு பிறகும்).

34. ஆஸ்திரேலியாவில் சச்சினுக்கு ரசிகர்கள் அதிகம்! சச்சினின் பெயரில் ஒரு தெரு உள்ளது. சச்சின் ஆட வரும்போது அனைவரும் எழுந்து நின்று கைதட்டுவார்கள். அங்கே பல

குழந்தைகளுக்கு சச்சின் என்கிற பெயர் உண்டு.

36. சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பதினெட்டு வயதில் 148 அடித்து கலக்கி எடுத்தார் சச்சின். ''சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் சதம் அடிப்பதே சாதனை. அதை 18 வயதுச் சிறுவன் செய்வதைப் பார்த்தபோது ஏதோ அதிசயம் நடப்பதைப் போல உணர்ந்தேன்!'' என்று சொன்னார் ஆலன் பார்டர்.

37. ஓயாத வெற்றிக்கான காரணம் என்ன என கேட்டபோது, "பேயை போல பயிற்சி செய்யுங்கள், தேவதையை போல ஆடுங்கள்!" என்றார்

38. பல முதன்முதல்களை வைத்து இருக்கும் சச்சின்தான், முதன்முதலாக தேர்ட் அம்பையர் கையால் அவுட் ஆனார்.

37. சவுரவ் கங்குலியின் அறை தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது; சச்சின்தான் ஹோஸ் பைப்பை குழாயோடு இணைத்து இதைச்செய்தார். அதிலிருந்து, சச்சின், கங்குலியை ‘பாபு மோஷல்’ என்று அழைப்பார். கங்குலி, சச்சினை ‘சோட்டா பாபு’ என்று அழைப்பார்.

39. மும்பை தாக்குதலுக்கு பின், சென்னையில் அடித்த சதம் அதிக பட்ச வலிக்கு நடுவே அடித்த மறக்க முடியாத சதம் என்றார்.

40. நீங்கள் உங்கள் தவறுகளை சச்சின் ஆடும்போது செய்யவும். கடவுளும் கவனிக்கமாட்டார். ஏனெனில் சச்சின் ஆடுவதை அவர் பார்த்துக்கொண்டு இருக்கிறார் அல்லவா?’ - மெல்பர்ன் நகரில் உள்ள வாசகம்.

41.சச்சினுக்கு ஒரு போட்டியில் பதினெட்டு வயதுக்குள் சதமடித்ததுக்கு ஆட்ட நாயகன் விருதோடு ஷாம்பெயின் பாட்டில் பரிசாக தரப்பட்டது. இந்திய விதிகளின்படி பதினெட்டு வயதுக்கு கீழே இருக்கும் பிள்ளைகளை அதை பயன்படுத்தக்கூடாது. சச்சின் அதை திறக்காமல் வைத்திருந்து தன் மகளின் முதல் பிறந்தநாளின் பொழுது அன்போடு திறந்தார். தன்னுடைய பெராரி காரின் மீது தீராக்காதல். அதை அஞ்சலியை கூட ஓட்ட விடமாட்டார் சச்சின்

42. "நீ நன்றாக ஆடினாய் சச்சின் !” என்று தட்டிக்கொடுக்காமல் என்றைக்கும் தன்னுடைய மாணவனுக்கு தலைக்கனம் ஏற்படக்கூடாது என்று மவுனம் காத்த இன்றைக்கு மட்டும் ஆட்டத்தை ஆடுகளத்தில் காண வந்த அச்ரேக்கர் அமைதியாகநிற்கிறார். “என் ஆசானே ! இப்பொழுது நான் நன்றாக ஆடினேன் என்று சொல்லுங்கள். இனிமேல் நான் ஆட ஆட்டங்கள் இல்லையே !” என்று அந்த குரலில் தான் எத்தனை வலி ?. பாரத ரத்னா விருதைப்பெற்றதும்...

No comments:

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...